
சென்னை: ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஓரிரு நாளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திருப்பூர் சத்யபாமா, சேலம் தமிழன் பார்த்திபன், ராணிப்பேட்டை தாஹிரா உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது விஜய்யுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களை தவிர இன்னும் விஜய்யின் அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
விஜய் அமைச்சரவை அமைச்சர்களுக்கு அண்மையில் தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அமைச்சர் என்.ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வித்துறை, அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை, அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடிமைப் பொருள் விநியோகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத்துறை, அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, அமைச்சர் பிரபுவுக்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அடங்கிய இயற்கை வளங்கள் துறை, அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காலியாக இருக்கும் அமைச்சரவை வேளாண்மை, உயர்கல்வி, இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் நலன், பால்வளத்துறை, மீன்வளத்துறை, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் காலதாமதம் காரணமாக அரசின் செயல்திறன் பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அமைச்சர்கள் இல்லாத துறைகள் சார்ந்த பணிகள் தொய்வடையும் சூழல் நிலவுகிறது. மேலும், 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிக்கும் பணிகளும் தாமதமாகியுள்ளன. அனைத்து துறைகளுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தலைமையில் ஆலோசனைக்குப் பிறகு துறை சார்ந்த அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகே, பட்ஜெட்டை தயாரிக்க முடியும். இந்த நிலையில், நாளை மறுநாள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவதை முன்னிட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மே 21 வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என கூறப்படும் நிலையில் நாளை ஆளுநர் சென்னை வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் யாருக்கு வாய்ப்பு? தற்போதைய தவெக அமைச்சரவையில் கீர்த்தனா மட்டுமே பெண் அமைச்சராக இருக்கும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன்படி, திருப்பூர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.பி சத்யபாமா, குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி, திமுக அமைச்சர் காந்தியை தோற்கடித்த தாஹிரா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தோற்கடித்த வி.எம்.எஸ். மதார் பத்ருதீன் முஸ்தஃபா, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வி.எஸ்.பாபு, மரிய வில்சன்? மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு, ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத் குமார், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இடம்பெற உள்ளனர். மேலூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறையும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.